Friday, December 6, 2013

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரத நாட்களாகும். ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் ``ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும்.

தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.

சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணி மாதத்தில் ``ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது''. சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலேயே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்நாளில், ``ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும். அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால் தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்க வேண்டும்.

ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஷ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து கிழக்கு நோக்கி ``ஓம் நமோ ஆதித்தாயாய புத்திரி பலம் தேஹிமோ சதா'' என்று கூறி மூன்று முறை வணங்கினால் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

அக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது.

இந்தியாவில் பாம்பை மூலவராக கொண்ட கோவில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோவில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். இந்நாளில் பெண்கள் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து பாம்புத் தொல்லை இருக்கக்கூடாது என வேண்டி விரதம் இருப்பர்.                                                                                                                    

மாலைமலர்

1 comments: